அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தானது, ஆனால் நண்பராக இருப்பது அதனிலும் கொடுமையானது. இதை சொன்னதே ஒரு அமெரிக்கர்தான் – புகழ்பெற்ற அந்த சாணக்கியர் ஹென்றி கிசிஞ்சர்.
ரஷயப்பேரரசு உடைந்த 1990களில், வாஷிங்டன் உலகத்தின் ஒரே வல்லரசாகிய தருணத்தில், பிரேசிலும் இந்தியாவும் அமெரிக்க அதிகாரத்தின் மீது எழ்ந்த அவநம்பிக்கையால் மற்ற உறவுகளை அமைத்துக் கொள்ள ஆரம்பித்தன.
அமெரிக்கா எப்பொதுமே தனக்குப் பிடிக்காத பேச்சுவார்த்தைகளை கைவிடுவது; சர்வதேச அதிகார அமைப்புகளின் கட்டுப்பாடுகளை மீறுவது; தாங்கள் விதிப்பதுதான் விதிகள், இணங்குவது உங்கள் கடமை போன்ற நிகழ்வுகளை உலகம் சகித்துக்கொண்டுதான் உள்ளது.
மறுபுறம், பெய்ஜிங் சீன ஏற்றுமதிகளுக்கு வர்த்தக விதிமுறைகளையும் உலகம் கண்டும் காணாமல்தான் உள்ளது.
இந்த இரண்டு பொருளாதார வல்லரசுகளில் எதை சார்வது என்பதில் பல நாடுகள் குழம்பின – எரியிற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்பது தான் வளரும் நாடுகளின் நிலை.
ஆனால் பிரேசிலும் இந்தியாவும் யாரையும் முழுமையாக சார்ந்திருப்பது இறையாண்மைக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்து அதற்கான வழிமுறைகளையும் வகுத்துக்கொண்டுள்ளன.
தற்போது பிரேசிலும் இந்தியாவும் டிரம்பின் வரிகளை எதிர்த்து அமெரிக்க பொருளாதார வற்புறுத்தலை வெற்றிகரமாக எதிர்க்க முடியும் என்று நிரூபித்தால், மேலும் பிற நாடுகள் நிச்சயமாக இந்த பாதையில் செல்ல ஏதுவாகும். இதன் விளைவு ஒரு புதிய உலக ஒழுங்காக இருக்காது, ஒழுங்கின்மையாகத்தான் இருக்கும் – 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல சக்திகளும் பலவீனமான சர்வதேச நிறுவனங்களும் இறுதியில் உலகப் போருக்கு அடித்தளமிட்ட குழப்பமான பன்முகத்தன்மைக்குத் இது உலகை திருப்பும். இது ஸ்திரத்தன்மைக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது.
ஆனால், அமெரிக்க மேலாதிக்க ஏகாதிபத்யம் முடிவுக்கு வரும்.
வரும் காலங்களில் விநியோகச் சங்கிலிகள் உடைக்கப்படும்போது ஒரு புறம் அமெரிக்கர்கள் அன்றாடப் பொருட்களுக்கு அதிக விலை கொடுப்பார்கள், டாலர் அதன் அந்தஸ்தை இழப்பதைப் பார்ப்பார்கள், உலகின் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து தங்கள் நிறுவனங்கள் பூட்டப்படுவதைப் பார்ப்பார்கள்.
மறுபுறம் பிரேசிலியர்களும் இந்தியர்களும் இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பத்திற்கான அதிக விலைகளை எதிர்கொள்ள நேரிடும், மொத்தத்தில் உலகத்தின் பொருளாதாரம் நசிந்து, நிச்சயமற்றதாகவும், மோதலுக்கு ஆளாகக்கூடியதாகவும் இருக்கும். குழப்பங்கள் அதிகரிக்கும்…
BRICS அமைப்பு எப்படி இதை எதிர்கொண்டு பொறுப்புடன் சமாளிக்கப்போகிறதோ – பார்ப்போம். ஆனால் அந்த பொறுப்பு ஒருதலை பட்சமல்லவே? அதில் அமெரிக்காவுக்கும் பங்கு உள்ளதே? மோடியும் பரேசிலின் லுலாவும் ட்ரம்புக்கு அடிபணிந்து தங்கள் நாட்டின் நலத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ட்ரம்பும் தன் நாட்டின் பொருளாதாரத்தைக் காட்டிலும் தன் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்பது நிச்சயம். அவருக்கு கடிவாளம் போட அமெரிக்க அரசியல் சாசனத்தில் வழியில்லை. இன்னும் நான்கு வருடங்கள் இந்த ஒருவரின் கோமாளித்தனத்திற்கு உலகமே அதிக விலை கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன் பிறகு மீள எவ்வளவு காலம் பிடிக்குமோ?
ஆனால் ஒன்று – வரலாற்றின் பாதை வெகு வேகமாக மாறிக்கொண்டு வருகிறது என்பது மட்டும் நிச்சயம். இந்த காட்டாற்றில் யாருக்கு அதிகம் பாதிப்பு என்பது போகப்போகத்தான் தெரியும்.
