பண்டிகைகளால் ஏதாவது நன்மை உண்டா? வீண் செலவுதானா? மேலோட்டமாக பார்த்தால் ஆம் என்று தோன்றினாலும், அறியப்படாத பல பலன்கள் இருப்பது, ஆய்ந்து பார்த்தால்தான் புலப்படும். இவ்விழாக்கள் சமுதாயத்தில் நல்லிணக்கம் நிலைத்து மேலும் உயர்ந்திடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. விவசாயத்தையே பெரும்பாலோர் ஆதாரமாக நம்பியுள்ள இந்திய நாட்டில், மற்ற தொழில்களையும் வளர்க்கத்தான் இத்தகைய பண்டிகைகள் உருவாக்கப்பட்டனவோ என்றும் ஒரு ஐயம் தோன்றுவதில் வியப்பொன்றுமில்லை. இந்த பண்டிகை காலங்களில் ஆட்டம்-பாட்டம், வாய்க்கு ருசியான இனிய உணவு என்று அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். வாழ்க்கையே போராட்டமாக உள்ள இந்த காலத்தில் இத்தகைய கொண்டாட்டங்கள், இதனால் ஒரு புத்துணர்வைத் தருகின்றன. சமுதாயத்தில் அமைதி தழைத்து நிலைத்திட சமுதாயத்தின் சின்னங்களான இந்த பண்டிகைகளும், நடை உடை பாவனைகளும் முக்கிய காரணங்களாக உள்ளன. எது எப்படியோ, இந்த கொண்டாட்டங்கள் நம்முடைய கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும், வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துக்காட்டி, காலம்காலமாக நிலைத்து நிற்க ஏதுவாகும் என்பதில் ஒரு ஐயமுமில்லை.
இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் பல திருவிழாக்களில் முக்கியமான நவராத்திரி திருவிழா இப்போது துவங்கிவிட்டது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் இது கொண்டாடப்பட்டாலும் விதம்விதமாக கொண்டாடப்படுவது வியக்கத்தக்க ஒன்று: தசரா, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுகா, குல்லு தசரா என்று வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் இதன் மையக் கருத்து ஒன்றே, பெண்மையின் மேன்மை!
தமிழ்நாட்டில் நவராத்திரி திருவிழாவை கொலு வைத்து சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த கொலுவை பெரும்பாலும் அஷ்டலட்சுமி மற்றும் சுவாமி சிலைகள் அலங்கரிக்கும். இந்த ஒன்பது நாட்களிலும் நண்பர்களை அழைத்து அவர்கள் பாடும் பாடல்களை அனுபவித்து, அவர்களுக்கு ‘சுண்டலுடன்’ பரிசும் (ரவிக்கைத்துண்டு நிச்சயம்) அளித்து மகிழ்வார்கள்.
மகிஷாசுரமர்த்தினியை மையமாக வைத்து கொண்டாடப்படும் ‘தசரா’ பண்டிகை, மைசூரில் விஜயநகர மன்னர்களின் ஆட்சி காலத்திலிருந்தே (17-ஆம் நூற்றாண்டு), விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ‘ஜம்பூசவாரி’ என்ற யானைகள் ஊர்வலம், வானவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள் என்று கர்நாடகாவே ஒன்பது நாளும் திமிலோகப்படும்.
‘தெலங்கானா’ பகுதியில் ‘பத்துகம்மா பண்டுகா’ என்ற பெயரில் வெகு விமரிசையாக நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. ‘பத்துகம்மா‘ என்றால் தெலுங்கில் ‘எங்கள் பெண் தெய்வமே உயிர் பெற்று வா’ என்று அர்த்தம். எனவே இந்த விழாவினை தாய்மையை கொண்டாடும் விழாவாகவே தெலங்கானா பகுதி மக்கள் பார்க்கிறார்கள். இந்த திருவிழாவின்போது பெண்கள் ஒரு தாம்பாளத்தின் மீது ஏழு அடுக்குகளாக வெவ்வேறு மலர்களை ஒரு குவியல் போல வடிவமைத்து வழிபடுவார்கள். அதன் பின்னர் பெண்கள் எல்லோரும் ஒன்று கூடி தாங்கள் தயாரித்த மலர் குவியலை நடுவில் வைத்து அதைச் சுற்றி நாட்டுப்புறப் பாடல்களை பாடி நடனமாடுவார்கள். இதைத்தொடர்ந்து அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு நீர்நிலைக்கு சென்று அந்த தாம்பாளத்தை நீரில் மிதக்க விடுவார்கள்.
கேரளாவில் விஜயதசமியும் அதற்கு முந்தைய இரண்டு தினங்களான அஷ்டமியும், நவமியும் கேரளாவில் முக்கிய நாட்களாக கருதப்படுகின்றன. எழுத்தறிவு விகிதம் அதிகம் உள்ள மாநிலமான கேரளாவில் இந்த மூன்று நாட்களும் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கிவைக்க ஏற்ற நாட்களாக கொள்ளப்படுகிறது. அதோடு அஷ்டமி தினத்தன்று சரஸ்வதி தேவி முன்பாக புத்தகங்களை வைத்து வணங்கி பின்பு விஜயதசமி தினத்தன்று எடுத்து படிப்பது கொண்டாட்டத்தின் முக்கிய அங்கம்.
மேற்கு வங்கத்தில் நவராத்திரி திருவிழாவை துர்கா பூஜா என்று அழைக்கிறார்கள். இவ்விழாவின் போது பல இடங்களில் பந்தல்கள் அமைத்து அதில் அசுரனை வதம் செய்யும் துர்கா, செல்வம் தரும் லட்சுமி, கல்வி தரும் சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் உருவச்சிலைகளை அமைத்து இரவு முழுவதும் வழிபாடு செய்வார்கள்.
குஜராத்தின் நவராத்திரி திருவிழாவின் போது மனித உயிரின் ஆதாரமான கருப்பையின் குறியீடாக மண் பானை முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த மண்பானையில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு பாக்கையும், ஒரு வெள்ளி நாணயத்தையும் போட்டு அதைச் சுற்றி அலங்கார ஆடைகள் அணிந்த பெண்கள் நடனமாடுவார்கள். கர்பா நடனம் என்று அழைக்கப்படும் இந்த நடனத்தை ஆண்களும் பெண்களோடு சேர்ந்து ஆடுவதுண்டு. குஜாரத்தின் சில பகுதிகளில் தாண்டியா நடனமாடியும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடுகிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக ஏதேனும் தொடங்குவதாக இருந்தாலும், புதிய பொருட்களை வாங்குவதானாலும் நவராத்திரி சமயத்தில் செய்வதை நற்பேற்றின் அடையாளமாக மக்கள் கருதுகிறார்கள். இந்த நாட்களில் பெண்கள் தங்கள் பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்து தேங்காய், பூ, வெற்றிலை பாக்கு கொடுத்து நெற்றியில் மாங்கல்யம் நிலைக்க திலகமிட்டு மகிழ்கிறார்கள்.
பஞ்சாபில் நவராத்திரி விழாவை பக்தி பரவசத்தோடு மக்கள் கொண்டாடுகிறார்கள். அதாவது 7 நாட்கள் துர்கைக்கு விரதம் இருந்து 8-ஆம் நாளான அஷ்டமியில் 9 இளம் பெண்களுக்கு விருந்து கொடுத்து விரதத்தை முடிக்கிறார்கள். இந்த விருந்து ‘பண்டாரா‘ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அப்போது அந்த பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்க மங்கள குறியீடாக சிவப்பு நிற துப்பட்டாவும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் என்று நவராத்திரி திருவிழா முடிகிறதோ அந்த நாளில்தான் ஹிமாச்சல பிரதேசதில் விழா தொடங்குகிறது. இங்கு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அயோத்திக்கு சீதையுடன் திரும்பிய வெற்றியை கொண்டாடும் விதமாக நவாரத்திரி விழாவை இவர்கள் கொண்டாடுகிறார்கள். மேலும் 10-ஆம் நாளான குல்லு தசரா, ஆட்டம்-பாட்டம் என்று வெகு உற்சாமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் விதம்விதமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை, இந்துக்கள் வெகுவாக குடியேறி வாழும் வெளிநாடுகளிலும், கலாசாரம் பரப்பும் ஒரு முக்கிய பண்டிகையாக திகழ்கிறது. இந்து கலாசாரம் வெகுகாலம் முன்பே தென்கிழக்காசிய நாடுகளில் பரவியிருந்த காரணத்தால், இங்குள்ள கோயில்களிலும் நவராத்திரி பல ஆண்டுகளாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது. நான் சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்தபோது இதை கண்கூடாக காணமுடிந்தது. இங்குள்ள பழமையான வடபத்ரகாளி கோயிலில் நான் ரசித்த ஒரு கலை நிகழ்ச்சியின் படப்பதிர்வுகளை பகிர்வதில் மகிழ்கிறேன். கடல் கடந்தும் கட்டிக்காக்கும் நம் நாட்டாரின் கலை உணர்வுக்கு தாராளமாக ஒரு ஜே போடலாமே!


இங்குள்ள மற்ற பல கோயிலில்களிலும் நவராத்திரி விமரிசையாகக் நடக்கிறது. இந்த நாட்களில் மாலைநேரத்தில் தினந்தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நம்பாரம்பரியத்தை, இங்குள்ள மற்ற நாட்டவர்க்கு மட்டுமன்றி நம்முடைய வளறும் தலைமுறையினருக்கும் விளக்கும் வகையில் அமைக்கின்றனர். இங்குள்ள நம் சமூகத்தினரில் பலரும் தம் வீடுகளில் கொலு வைத்து நண்பர்கள் குடும்பத்துடன் அழைத்து கொண்டாடும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பது, நம் இந்திய கலாச்சாரத்தை உலகெங்கிலும் ஒரு உன்னத இடத்தில் கொண்டு சேர்க்க ஏதுவாகும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
பெண்மையின் மேன்மையை தாய்மை, தயை, கல்வி, கலை, வீரம், அன்பு என பன்முகமாக ஆராதிக்கும் இந்த நவராத்திரி கொண்டாட்டம், சமுதாயத்தில் அமைதி என்றென்றும் நிலைத்திட உதவட்டும்; ஆரோக்கியம் தழைக்கட்டும்; உலகு எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.


!