மனிதனின் உலகம் இயல்பாகவே சிறியதுதான். அவனுடைய உலகம் அடிப்படையில் இனம், மொழி, மதம், பிராந்தியம் என்ற அடையாளங்களில் ஏதாவதாக இருக்கலாம். இவற்றை தாண்டிய உறவுகளை ஏனோ மனிதன் தேடுவதில்லை. ஒருவேளை அது பாதுகாப்பற்றது நினைக்கிறானோ என்று தோன்றுகிறது.
ஒருசில கட்டாயங்களாலோ அல்லது உலகமயமாக்கலாலோ, ஒத்துழைக்கவேண்டியது அவசியமாகும்போது, பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் நேருகிறது. இதனால் பொருளாதார அளவில் வசதியாக இருந்தாலும், அன்றாட வாழ்க்கை ஒருவகையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். சுயநலவாதிகள் இந்த அழுத்தத்தை பெரிதாக்கத்தான் செய்வார்கள். யதார்த்தவாதிகள் அழுத்தத்தை மறந்து காலம் காலமாக அனுசரித்து வாழ்வதையும் நாம் பார்க்காமல் இல்லை.
சுயநலவாதிகளின் கை ஓங்கும்போது நிம்மதியை இழக்க நேரிடலாம். சட்டம் ஒழுங்கு கூட நிலைகுலையலாம். இதுதான் உலக இயற்கை. இந்த வாழ்க்கை ஒரு வகையில் போராட்டம்தான்.
நமக்கு ஆறுதலான குறுகலான குழமத்திலிருந்து வெளியேறி, அடுத்தவர்களின் வழிமுறைகளைப் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை பயிற்றுவித்தால், அந்த சமுதாயம் ஒரு சொர்க்கம்தான். இந்த போராட்டங்களை ஏற்றுக்கொள்பவர்களே தன் ஊர் எல்லையை தாண்டலாம். இல்லை என்றால் கிடைக்கும் வாய்ப்புக்களை தொலைத்துவிட்டு ‘குண்டு சட்டியில் குதிரைஓட்டி மகிழலாம்’!
“சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போலாகுமா” என்பதும் சிலரின் யதார்த்த வாதம்தான்.
இந்த சமுதாயப்போராட்டங்கள் ஒரு புறம் இருக்க, உலகமயமாக்கல் உச்சத்திலிருந்த காலம் கடந்து இப்போது தேசியவாதம் என்ற முழக்கம் கேட்க ஆரம்பித்துவிட்டது. காலச்சக்கரம் சுழன்று இப்போது குறைந்த விலையில் பொருட்கள் என்பதை கடந்து நாமோ அல்லது நமக்கு வேண்டியவர்களோ தயாரிக்கும் பொருள்களை வாங்கவேண்டிய காலத்தில் இருக்கிறோம். காலம் மாறிவிட்டது… கடல் கடந்து திரவியம் தேடவேண்டியது அந்த காலம் – make in India இந்த காலம்.. இந்திய, ஜப்பான் சீன நாடுகளின் விளையாட்டை அமெரிக்கா புரிந்துகொண்டுவிட்டது.. எல்லா நாடுகளும் தேசியவாதிகளாகி விட்டார்கள். நாடுகளிடையே இந்த பொருளாதார அழுத்தத்தை தாண்டி மத இன வேறுபாடுகளாலும் உலக சமுதாயத்தில் நல்லிணக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. எங்கு எப்போது வேண்டுமானாலும் போராட்டங்கள் வெடிக்கலாம்….
இதற்கு விடிவுதான் என்ன? காலம்தான் விடை சொல்லவேண்டும்!

