தென்னிந்தியாவில் வீடுகளில் ஒரு கலாச்சார எடுத்துக்காட்டாக இருந்த திண்ணைகளை இப்போது காணப்படுவதே இல்லை. ஏன்??
ஆர் கே நாராயணின் நாவல்களை படித்தவர்களுக்கு Pyol என்ற வார்த்தை தெரிந்திருக்கும்! அதுதான் நம் திண்ணை. ஆங்கிலத்தில் இப்படி திண்ணை என்ற ஒரு கலாசாரமே இல்லாதபோது – இது எப்படி உபயோகத்துக்கு வந்திருக்கலாம் என்ற கேள்வி நியாயமானதுதான். ஆர் கே நாராயணின் நாவல்களை படிப்பவர்களுக்கு “நமஸ்காரம், தோப்புக்கரணம்” போன்றவற்றை விளக்க அவர் எவ்வளவு கஷடத்தை அனுபவித்திருப்பார்? அவர் தமிழில் கற்பனை செய்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவராக இருந்திருந்தால் “எது எது எப்படி எப்படி நடக்குமோ அது அது அப்படி அப்படித்தான் நடக்கும்” என்று ஏதாவது அவரது கதாபாத்திரம் கூறி இருந்திருந்தால் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடி இருப்பார். இது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் இந்த திண்ணைக்கு வருவோம்.
இது ஒரு காலத்தில் கிசுகிசு, சீட்டாட்டம், சில சமயங்களில் ட்யூஷன் எடுப்பதற்கும் கூட இது ஒரு இடமாக இருந்தது! ஆம் திண்ணைகள் அவ்வளவு பெரியது. நம் அண்டை வீட்டாருடன் பழகுவதற்கு அப்போது அவர்களுக்கு நேரம் இருந்தது. நாமும் நம் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகாமல் உங்கள் நண்பர்களுடன் பேசக்கூடிய இடம் அதுதான். வீட்டு வேலைகளில் இருக்கும் நம் உறவினருக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து ரகசியமாக எதையும் பேசிக்கொண்டிருக்கலாம். டீ, காபி என்ற சம்பிரதாயம் கூட தேவையில்லை!! என் நெருங்கிய நண்பர்களுடன் நம் பிரபல நடிகர்களை (நிச்சயமாக நடிகைகளும்தான்) கிசுகிசுத்தது, A ஜோக்குகள் பகிர்ந்து கொண்ட விலைமதிப்பற்ற நேரத்தை என்னால் மறக்கமுடியாது.
திருமணங்கள் (அல்லது அசுபகாரியங்கள் எது நடந்தாலும்) வீட்டில் நடக்கும் காலகட்டங்களில் திண்ணைகள் கை கொடுக்கும். ஷாமியானா வேண்டாம். வீட்டில் அவசியமானவர்களைத்தவிர மற்றவர்கள் திண்ணையில்.
வழிப்போக்கர்கள் இரவு தங்குவதைக்கூட அனுமதிப்பது உண்டு. அது ஒரு காலம். பிறகு அதுவே ஒரு ந்யூசன்ஸ் ஆனபிறகு கேட் போட்டுவிட்டார்கள். வீட்டின் ஒரு பகுதியாக இருந்தது. வீட்டில் வயதானவர்களை ‘கடைசி கால உபசாரம்’ அங்கு செய்வதையும் பார்த்திருக்கலாம்.
ஆனால் எங்கள் சொந்த ஊரில் உள்ள வீட்டில் அதே திண்ணை இன்றும் இருந்தாலும், இப்போதெல்லாம் அது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது – அது நீண்ட காலத்திற்கு முன்பே பார்க்கிங் இடமாக மாறிவிட்டது!!
இடத்தட்டுப்பாடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வடிவமைப்புகளின் காரணங்களால், இதுபோன்ற தனியுரிமைகள் கட்டுப்படியாகாத ஆடம்பரங்கள். நகர வாழ்க்கையின் என்னவோ நமது கலாச்சாரத்தின் சில அம்சங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மறைந்துவிட்டன!!

