காலம் மாறிவிட்டது. நம் திருமண வைபலங்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள் – 30 வருஷத்திலேயே எவ்வளவு மாற்றங்கள் பாருங்கள்.
பாக்கு வெற்றிலை மாற்றி ஊர்மக்கள், சொந்த பந்தங்களின் முன் நிச்சயம் செய்வது – வார்த்தை மாறக்கூடாது மாறக்கூடாது என்பதற்கு – ஏனெனில் திருமணம் நடக்கும் வரை ஆகும் செலவுகள் விரயமாக கூடாது என்பதால். மேலும் மணப்பெண் மாப்பிள்ளையை ஊருக்கு அறிமுகம் செய்விப்பதும் இதில் ஒரு அங்கம். இவர்களைப் பற்றி ஏதாவது விவகாரங்கள் தெரிந்தால் மக்கள் அப்போதே வெளிப்படுத்திவிடுவார்கள்.
மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் அந்த நாட்களில் பரிச்சயம் இல்லாமல் இருப்பார்கள். அந்த கூச்சத்தை போக்கத்தான் நலங்கு போன்ற சடங்குகள். வியட்நாம் வீடு பத்மனாபனைப்போல் அம்மாஞ்சித்தனமாக ஆடவனும் தொழுவத்தில் இருக்கும் மிரண்ட பசுவைப்போல் நம் பட்டு மாமியும் தாம்பத்தியத்தில் அடி எடுத்து வைத்த காலம் அது.
அந்த நாட்களில் நாலு நாள் திருமண சடங்குகள் நடக்கும். ஆறு பெண் பிறந்தால் அரசனும் போண்டிதான் என்ற கதை. ஆனால் நடுவில் இது வெகுவாக குறைந்து சடங்குகள் சுறுக்கப்பட்டு இரண்டு நாட்களில் திருமணம் முடிந்துவிடும். அதனால் செலவும் குறைவுதான். பெண்ணின் தகப்பனும் நிம்மதியாக வாழ்க்கையை தொடரலாம். இது வரவேற்கத்தக்கதுதான்.
ஆடிமாதம் தம்பதியை பிரித்து வைத்திருப்பார்கள் – ஏனெனில் அப்போது கருத்தரித்தால் சித்திரை மாதம் வெயிலில் பிரசவம் – AC இல்லாத நாட்களில் தாயும் சேயும் மிகவும் சிரமப்படுவார்கள். மேலும் கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பதால் தாய் வீட்டில்தான் டெலிவரி என்பதெல்லாம் கிடையாது. பெண்ணே செலவை பார்த்துக்கொள்வாள். தாயின் ‘கர் சேவா’ மட்டும்தான் எதிர்பார்ப்பு.
ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செயதுகொள்வதால் கூச்சத்தை போக்கும் சடங்குகள் வீண்தான். ஆயினும் இப்போது நடக்கும் நிச்சயதார்த்தங்கள் பெரு விழாக்கள். நண்பர்களுடன் கொண்டாட சங்கீத் போன்ற நிகழ்ச்சிகள். இதனால் சமீப காலங்களில் செலவு திரும்பவும் அதிகரித்துவிட்டது என்பது தான் யதார்த்தம்.
இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே PRE WEDDING PHOTO SHOOTல் இவள் “சைய்ங்” என்று அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டு விடுகிறாள்!
Pre Wedding Shoot லேயே இடுப்பை சுற்றி காலைக் கோர்த்துண்டுடறதுகள்! சகிக்கவில்லை… சொன்னால் இந்த காலத்தவர்கள் நம்மை ஏளனம் செய்வார்கள். பத்தாம் பசலி என்பார்கள்.
திருமணத்துக்கு முன்னரேயே living together உண்டானாதாலும் AC எங்கும் வழக்கமாக உள்ளதாலும் ஆடிமாத பிரிவெல்லாம் waste. பெண் சம்பாதிப்பதால் தன் தாய்தந்தைகளை நம்பி அவள் இல்லை. ஆனால் குழந்தை பிறந்தபின் அவர்கள் baby sittingக்காக வீட்டில் இருந்தால் நலம். அதுவும் மாமியார் வேண்டாம் மனம்ஒத்துப்போகும் தாய்தான் better. மனம் விட்டு பேசலாம் உரிமையோடு வேலையும் வாங்கலாம் அல்லவா?
இப்போதெல்லாம் பெண் கிடைப்பதுதான் கஷ்டம். ஏனெனில் பெண்களுக்கு தன் உரிமைகளையும் சொந்தங்களையும் விட்டுக்கொடுக்கவேண்டிய கட்டாயம் இல்லை. பொருளாதார சுதந்திரம். சுயமரியாதை. திருமண செலவுகள் கூட sharing தானாம். ரொம்ப பேசினால் உடன் divorce தான்! காதலாவது கத்தரிக்காயாவது.
ஒரிரு குழந்தைகளே பெற்றுக்கொண்டதால் பந்தங்களே குறைவு. காற்று மாசு அப்படி இப்படி என்று பண்டிகைகளும் சுறுங்கிவிட்டன. அதனால் எப்படி கொண்டாட வேண்டும் என்பதை you tubeஇல் தான் தெரிந்து கொள்ளவேண்டும். பட்சணங்கள் செய்வதை எப்போதோ மறந்தாகிவிட்டது.
முப்பது வருடங்களில் எவ்வளவு மாற்றங்கள்? இந்த மாற்றங்கள் முன்னேற்றத்தை காட்டுகிறதா அல்லது நாம் நம் கலாசாரத்தை கை கழுவி விட்டதை குறிக்கிறதா? ஏன் நாம் துரித கதிக்கு மாறிவிட்டோம்? ஆனால ஒரு சிலர் சொல்கிறார்கள். காலசக்கரம் சுழன்று திரும்பவும் நம் கலாசார சிந்தனைகள் மரபுகள் பற்றிய விழிப்புணர்வு இந்த ஜெனரேஷனுக்கு வந்துவிட்டது என்கிறார்கள். மேலை நாட்டு மோகம் குறைவதாகவும் பாரப்பரியத்தில் ஈடுபாடுகள் அதிகரித்து வருவதாகவும் கூறுகிறார்கள். இளந்தறைமுறையினருக்கு நம் ஆடல் பாடல்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது என்கிறார்கள். இது நடந்தேறினால் மகிழ்ச்சிதானே?
என்னவோ போங்கள்.. எனக்கு அந்த வாழை இலையில் தமிழ் பாரம்பரிய சமையல் (வடக்கத்திய கலப்படமில்லாமல்) சாப்பாடு பரிமாறும் திருமணங்களை பார்த்து வெகு நாட்களாகிவிட்டன… சப்பாத்தி, பூரி, புலவு அறவே இல்லாமல் மெனு இருந்தால் ஓரக்கண்ணால்தான் பார்க்கிறார்கள். ஒரே நாள் மட்டும் போடப்படும் (நமது வேர்க்கும் தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத) கோட்-சூட் இல்லாத மாப்பிள்ளை அழைப்பை நீங்கள் பார்த்து எவ்வளவு நாள் ஆகி இருக்கலாம்!
மாற்றம்தான் மாறாதது என்கிறார்கள். ஏன் நாம் பழைய வேட்டி சட்டை கலாசாரத்துக்கு (கல்யாணத்திலாவது) மாறக்கூடாது?
வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் நம் கலாசாரத்தை கடைபிடிப்பதில் காட்டும் ஆர்வத்தை ஓரளவாவது நாம் காட்டினால், நமது கலாசார சாவை ஓரளவுக்காவது தாமதப்படுத்தலாம்!








